இந்திய விடுதலைப் போரிலும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியவாதிகளின் பங்கு மகத்தானது. காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என கலை இலக்கியத் துறையினர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. நாடு முழுவதும் எண்ணற்ற கலை இலக்கியவாதிகள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் மகாகவி பாரதி. ரஷ்யப் புரட்சி நடந்தவுடனே அதை போற்றிப் புகழ்ந்து உலகுக்கு அறிவித்த மகத்தான கவிஞர் அவர். பாரதியைப் பின்பற்றி தமிழ் மண்ணில் ஒரு பெரும்படையே புரட்சிக்கு கட்டியம் கூறி வந்தது. கம்யூனிச இயக்கத்தில் இணைந்து பாட்டாளி மக்களோடு நின்றது. தமிழ் மண்ணைப் போலவே நாடு முழுவதும் முற்போக்கு எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் தங்களது கவனத்தைச் செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியோடு இரண்டறக் கலந்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இப்டா என முழுவீச்சில் கலை இலக்கிய உலகம் கம்யூனிசத்தைப் பரப்பிய காலமாக அது மலர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஒரு பொன்னோவியமாக கலை இலக்கிய வாதிகளின் பங்களிப்பு எனும் அத்தியாயம் திகழ்கிறது. அந்த மாபெரும் அத்தியாயத்தின் சில பகுதிகளை இங்கு தருகிறார், தமிழக கலை இலக்கிய உலகின் முன்னத்தி ஏர்களில் ஒருவரும் மார்க்சிய, இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான எஸ்.ஏ.பெருமாள்.
எட்டைய புரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி ஒரு ஆன்மீகவாதியாய் வளர்ந்து தேச பக்தராய் மாறி விடுதலைப் போர் பாடல்களை வடித்தவர். சாதி, மதங்களுக்கெதிராகவும், பெண் விடுதலைக்காகவும், முதல் குரல் கொடுத்தவர். புரட்சி, பொதுவுடைமை போன்ற வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ரஷ்யப் புரட்சியை பாராட்டி பாமாலை சூட்டியவர். ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி தோல்வியடைந்ததும், பாரதி “நமது ருஷ்யத் தோழர்களின் உன்னதமான முயற்சிகளுக்கு ஈசன் திருவருள் புரிவானாகுக” என்று எழுதினார். பின்பு அக்டோபர் புரட்சி வெற்றியடைந்ததும்,
“மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங் கோலன் அலறி வீழ்ந்தான்
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பேர் இசைந்த பாவி
அடிமைக்குத் தளையில்லை, யாருமிப்போது
அடிமையில்லை, அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!”
ரஷ்யப் புரட்சியை வரவேற்றது மட்டுமல்ல, பொதுவுடைமையை வரவேற்றும், இந்தியாவிலும், அத்தகு நிலைமை வரவேண்டுமென்றும் விரும்பிய பாரதி....
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக் கோர்புதுமை”
-என்று பாடினார்.
அவரது பாடல்களும், உரைநடையும் சுதந்திரப் போரில் பங்கேற்குமாறு மக்களை அறைகூவி அழைத்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடி நாம் ரத்த வெள்ளத்தில் மடிந்தாலும், பன்முறை தோற்கும் நிலை வந்தாலும், இறுதியில் வெற்றி பெற்றே தீருவோம் என்றார் பாரதி. சுதந்திரம் வருவதற்கு முன்பே.....
“ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே
ஆனந்த ஸ்வதந்திரம் அடைந்துவிட்டோமென்று,
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு”
- என்று பாடினார்.
***********************************
மகாகவி பாரதியோடு பத்தாண்டு காலம் இணைந்து அவரிடமிருந்து ஞானம் பெற்றவர். அதனால் கனக சுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். 1891ல் புதுச்சேரியில் பிறந்த இவர், பாரதியைப் போலவே தேச பக்தி, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, சாதிமத எதிர்ப்பு, பெண் விடுதலை என்று 103 நூல்களை எழுதி குவித்தவர். இந்திய சுதந்திரத்தை நேசித்தவர்.
பாரதியைப் போலவே பாரதிதாசனும் பொதுவுடைமை கொள்கையை வலியுறுத்தினார்.
“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் (புதிய)
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்”
- என்று பாடினார்.
தொழிலாளிகள், விவசாயிகள் பற்றியும், ஏழை, எளிய மக்களைப் பற்றியும் கவிஞர் மிகவும் கவலையோடு பாடியுள்ளார். அவர்களைப் பார்த்து இந்த உலகம் உங்களுடையது என்று கூறினார்.
“சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!”
முன்பு நஞ்சை, புஞ்சையெல்லாம் பொதுவில் இருந்தது. ஆனால் அதை மன்னர்கள் கைப்பற்றி பிராமணர்களுக்கும், வேளாளர்களுக்கும் வழங்கினர். இதனால் விவசாயிகள் கூலிகளாகினர். அவர்களைச் சுரண்டி நிலப் பிரபுக்கள் கொழுத்தனர். அம்மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும், ஏழை, பணக்காரர் இல்லாத உலகத்தை உருவாக்கவும் விரும்பினார்.
“ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப் பார்!
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்
செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!”
- என்று வலியுறுத்தினார்.
அடங்கி ஒடுங்கி குனிந்து தரையை கவ்விக் கிடக்காதே. பொட்டுப்பூச்சியாய், புன்மைத் தேரையாய் ஆமையைப் போல அடங்கி ஒடுங்கி கிடக்காதே. தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்கு, மீசையை முறுக்கி மேலே ஏற்று என்று ஏழைகளுக்கு அறிவுறுத்தினார்.
பாரதி தாசனை புரட்சிக்கவியாக மாற்றியது பாரதியின் தொடர்பு, புதுச்சேரி வாழ்வு, பெரியார் ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் இம்மூன்றுமே ஆகும். பாரதி சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்ப்பட்டவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றும் பிரெஞ்சு புரட்சி உலகிற்கு வழங்கிய உயர்ந்த கோட்பாடுகள். இவற்றாலும் பெரியாரின் தலையாயக் கொள்கையாம் மூடத்தன எதிர்ப்பு - இந்தத் தாக்கங்களால்தான் புரட்சிக்கவிஞராக மாறினார்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!”
- என்றும் பகுத்தறிவு சிந்தனைகளை குழந்தைகளுக்கு கூட தாலாட்டு மூலம் எடுத்துக்கூறினார். “சாணிக்கு பொட்டிட்டு சாமி என்று கும்பிடுவார் - நாணி கண்ணுறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு” என்று பாடுகிறார்.
கணவன் இறந்துபோனால் பெண்ணை கைம்பெண் எனக்கூறி வதைப்பது இங்கு வழக்கமானது. இந்த கைம்பெண்களை மறுமணம் செய்ய ஏற்பாடு செய்து வாழ்வளிக்க வேண்டும் என்றார். நம்வீட்டு பெண்களுடைய இதயத்தையே வாள் கொண்டு சமூகம் சிதைக்கிறது.
“கைம்மை எனக்கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்
செம்மை நிலையறியோம் - பெண்களின்
சிந்தயை வாட்டுகின்றோம்
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்.”
- என்று பெண் விடுதலை,
பெண் உரிமைகளுக்காக ஏராளமாக எழுதியுள்ளார். ஏராளமான கவிதைகளையும் எழுதியோடு, சில திரைப்படங்களுக்கும் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். பெரியாரோடும், பகுத்தறிவோடும் இரண்டற கலந்து நின்றார். திராவிட இயக்கத்தில் சிலர் அவரிடம் பாரதி பிறப்பால் பிராமணர்; ஆனால் நீங்கள் சனாதனத்தை எதிர்க்கும் இயக்கத்தில் புரட்சிக் கவிஞர் ‘பிராமணனுக்கு தாசன் என்ற பொருளில் பாரதி தாசன் என்ற பெயர் வைத்தது தவறு என்று சிலர் குறைகூறினர். இதைக் கேட்டு பாரதிதாசன் வெகுண்டெழுந்தார். பாரதியைக் காட்டிலும் சாதி அமைப்பை சனாதனத்தை ஒழிக்க பாடியவன் வேறு யார் என்று அவர்களை திருப்பிக் கேட்டார். அவர் கடைசி வரை பாரதிக்கு தாசனாகவே வாழ்ந்தார்.
நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும். செல்வமெல்லாம் பொதுவாக வேண்டும் என்றும் புதிய உலகு செய்வோம் என்றும் கவிஞர் பாடிய பாரதிதாசன்..
பாரதிக்கு பிறகு தமிழகத்தில் உழைப்பாளி மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறார்.